Published : 13 Aug 2025 06:50 AM
Last Updated : 13 Aug 2025 06:50 AM
சென்னை: ரூ.120 கோடி வங்கி மோசடி வழக்கில் தமிழகத்தில் 6 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை மேற்கொண்டது. காஞ்சிபுரத்தை தலைமையகமாகக் கொண்ட பத்மாதேவி சர்க்கரை ஆலை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள், அரசு ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.120.84 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக தென்காசி, சென்னை மற்றும் திருச்சி உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக குற்றம்சாட்டப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர்கள், அவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.
இதில் பல்வேறு சொத்து ஆவணங்கள், பண பரிவர்த்தனை தொடர்புடைய சான்றுகள், டிஜிட்டல் ஆதாரங்கள் உள்பட ஏராளமான ஆவணங்கள் சிக்கி உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், சென்னை நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும், அவர் பங்குதாரராக உள்ள பல்வேறு நிறுவன அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. அவர், பிரபலமான நட்சத்திர ஓட்டல், கல்வி நிறுவனங்கள், சர்க்கரை ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT