Published : 12 Aug 2025 06:42 AM
Last Updated : 12 Aug 2025 06:42 AM
சென்னை: குழந்தை கீழே கிடந்ததாக போலீஸில் ஒப்படைத்து நாடகமாடிய இளைஞரும், மாணவியும் அக்குழந்தையை பெற்றுக் கொண்டு வளர்க்க சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தை தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கையில் கட்டைப்பையுடன் இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை வந்தார்.
அவர் கட்டைப்பையை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம் கொடுத்து, ``நான் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, சாலையோரம் கட்டைப்பையில் வைத்தவாறு இந்த குழந்தை கீழே கிடந்தது'' எனத் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார், அந்த இளைஞரிடம் குழந்தை எந்த இடத்தில் கிடந்தது? எப்போது பார்த்தீர்கள்? எனக் கேள்விகளை எழுப்ப, இளைஞர் முன்னுக்குப் பின் முரணான பதிலளித்தார்.
சந்தேகமடைந்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். உடனே, அந்த இளைஞர் `மன்னித்து விடுங்கள். இந்தகுழந்தை எனக்கு பிறந்ததுதான். உங்களிடம் பொய் சொல்லிவிட்டேன்' எனக்கூறி கதறி அழுதார். மேலும் அந்த இளைஞர் போலீஸாரிடம் கூறுகையில், ``என் பெயர் பிரவீன்(21).
ஊட்டியில் உள்ள கல்லூரியில் படித்த போது, அதே கல்லூரியில் படித்த சேலத்தைச் சேர்ந்த 21 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தோம். பின்னர் நான் அரசு வேலைக்காக சென்னை சைதாப்பேட்டையில் தங்கி குரூப்-1 தேர்வுக்குத் தயாராகி வருகிறேன்.
மாணவி, கிண்டியில் உள்ள விடுதியில் தங்கி சென்னை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சென்னையில் இருந்ததால், நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். இதனால் மாணவி கர்ப்பமடைந்தார். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி விடுதியில் இருந்த மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
மாணவியின் தோழிகள் விடுமுறைக்கு ஊருக்கு சென்றதால், விடுதி கழிப்பறையிலேயே மாணவி குழந்தையைப் பெற்றெடுத்தார். இதையடுத்து குழந்தையுடன் நானும், மாணவியும் திருவல்லிக்கேணியில் தனியாக அறை எடுத்து தங்கி யோசித்தோம். குழந்தை பிறந்த விவகாரம் வெளியே தெரிந்தால் இரு குடும்பத்தினரும் கோபப்படுவார்கள். குழந்தையை வளர்க்கவும் வசதி இல்லை. மேலும் குழந்தையை கொலை செய்யவும் மனம் வரவில்லை.
அப்போதுதான் குழந்தை சாலையோரம் கிடந்ததாக நாடகமாடி போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டால் அவர்கள் வளர்க்க தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என முடிவு செய்தோம். அதன்படி திட்டத்தை செயல்படுத்தினோம். ஆனால், விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிட்டது'' என போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, ஏழரை மாதத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க போலீஸார் ஏற்பாடு செய்தனர். அதோடு மட்டுமல்லாமல் இருதரப்பு பெற்றோரையும் நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் சம்பந்தப்பட்ட இளைஞர், மாணவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து குழந்தையை வளர்க்க இருவரும் ஒப்புக்கொண்டனர். அதோடு மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர் தரப்பும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைக்க இருதரப்பு பெற்றோரும் முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT