Published : 11 Aug 2025 06:40 AM
Last Updated : 11 Aug 2025 06:40 AM
கோவை: கோவையில் வசிக்கும் பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் செட்டிப்பாளையம் காவல்நிலையத்துக்கு சென்று, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாங்கள் ஒருவரை கொன்று கிணற்றில் வீசியதாக கூறி சரண் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இளைஞர் சடலத்தை மீட்டு இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் நியூட்டன்(28), பெனிட்டோ(27) சென்னை அண்ணா நகரில் தங்கி பணியாற்றி வந்தனர். பின்னர் அங்கு வந்த மற்றொரு நண்பரான ஜெயராமனுக்கு(24) வேலை வாய்ப்புக்காக நியூட்டன் ஓர் ஆட்டோவை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். ஆனால், ஜெயராமன் அதை முறையாக ஓட்டாமல் மது குடித்து சுற்றித்திரிந்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் நியூட்டன் தாக்கியதில் ஜெயராமன் உயிரிழந்தார். பின்னர் கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பாலமுருகன், அவரது நண்பர் முருகப்பெருமாள் ஆகியோர் உதவியுடன் ஜெயராமனின் சடலத்தை, மலுமிச்சம்பட்டியிலுள்ள கிணற்றில் கல்லை கட்டி வீசியுள்ளனர்.
பின்னர் பாலமுருகன் இவ்விவகாரத்தை கூறி, நியூட்டன், பெனிட்டோவிடம் பணம் கேட்டு அடிக்கடி மிரட்டியுள்ளார். ஓரிரு முறை பணம் கொடுத்த அவர்கள் பின்னர் தராததால் பாலமுருகனும், முருகப்பெருமாளும் செட்டிபாளையம் போலீஸில் சரணடைந்தனர். போலீஸ் விசாரணையில் நியூட்டன், பெனிட்டோ ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிந்ததால் அவர்களையும் கைது செய்தனர். நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT