Published : 10 Aug 2025 10:15 AM
Last Updated : 10 Aug 2025 10:15 AM

திருத்தணியில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞரை கொல்ல முயற்சி!

திருத்தணியில் பொதுமக்கள் நிறைந்த பகுதியில் இளைஞர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

திருத்தணி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சதீஷ்(எ) பாஷா(31) அவரது நண்பர்களுடன் கடந்த 5-ம் தேதி காசிநாதபுரம் கிராமத்தில் நடைபெற்றஜாத்திரை திருவிழாவில் பங்கேற்று விட்டு இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

முன் விரோதத்தால் வாக்குவாதம்: பொதுமக்கள் நிறைந்த சித்தூர் சாலையில் நேரு நகர் முனையில் நின்றிருந்த போது அங்கு வந்த நேரு நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் சந்துரு (22).பெருமாள் என்பவரின் மகன் புருஷோத் (25) ஆகியோருடன் இருந்த முன் விரோதத்தால் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது புருஷோத் தன் கையில் வைத்திருந்த கவரில் இருந்து நாட்டு வெடிகுண்டை எடுத்து சதீஷ் மீது வீசினார். அவர் உடனடியாக தப்பி அங்குள்ள கடையில் பதுங்கிக்கொண்டதால், உயிர் தப்பினார். டிஎஸ்பி அலுவலகம், வங்கிகள், கடைகள் நிறைந்து பொதுமக்கள் நட மாட்டம் நிறைந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக சதீஷ் அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சந்துரு. புருஷோத் ஆகியோரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x