Published : 09 Aug 2025 06:20 AM
Last Updated : 09 Aug 2025 06:20 AM
சென்னை: சென்னை வியாசர்பாடி, பி.பி. சாலை பகுதியில் வசிப்பவர் ரபேல் (63). வீட்டின் அருகில் கார் பழுது பார்க்கும் ‘ஒர்க் ஷாப்’ நடத்தி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராணி (60) என்பவர் அவரது காரை பழுது பார்க்க ரபேலின் பணிமனையில் விட்டுச் சென்றார். அந்த காரை கடையின் எதிரே உள்ள சாலையோரத்தில் ரபேல் நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி அந்த காரை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். அதிர்ச்சி அடைந்த ரபேல் இது தொடர்பாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் காரை திருடிச் சென்றது கடலூர் மாவட்டம், பேப்பூர் தாலுகாவைச் சேர்ந்த அரவிந்த் (20) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் இந்த வழக்கு தொடர்பாக வினோத தகவல் வெளியானது. அதாவது ராணியின் காரை ரபேல் கடையின் எதிரே சாலையோரம் நிறுத்தினார். இதை நோட்டமிட்ட பிரதீப் ராஜா என்பவர், அவரது செல்போனில் காரை படம் பிடித்து, குறைந்த விலையில் விற்பனை செய்யவுள்ளதாக ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் விளம்பரம் செய்தார்.
பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் அரவிந்த் இதைப் பார்த்தார். உடனடியாக காரை வாங்கிக் கொள்வதாக கூறி பிரதீப் ராஜாவை போனில் அழைத்து ரூ.1.25 லட்சம் விலை பேசி, பணத்தைக் கொடுத்து காரை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ரெக்கவரி வாகனத்தை வாடகைக்கு எடுத்து, அதன் மூலம் காரை தனது இடத்துக்கு எடுத்துச் சென்றார். எந்தவித ஆவணமும் இல்லாமல் காரை வாங்கியதால் அரவிந்த் கைது செய்யப்பட்டார். போலீஸார் கைது செய்யும்போதுதான் இந்த விவகாரம் அரவிந்துக்கு தெரியவந்தது.
அவரிடமிருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பழுதுபார்க்க விடப்பட்ட காரை தனது கார் எனக்கூறி விற்பனை செய்த பிரதீப் ராஜா என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரது பின்னணி என்ன என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT