Published : 08 Aug 2025 06:17 AM
Last Updated : 08 Aug 2025 06:17 AM
சென்னை: தமிழக மின் வாரியத்தில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த நபரை அயனாவரம் போலீஸார் கைது செய்தனர். சென்னை அயனாவரம், சக்ரவர்த்தி நகரைச் சேர்ந்தவர் ஐயங்கார் (62). இவரது மகள் ஹேமாவதி 2021-ம் ஆண்டு, 2-வது பிரசவத்துக்கு தந்தை வீட்டுக்கு வந்திருந்தார்.
அப்போது, ஹேமாவதி கணவரின் உறவினரான கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுபத்ரா (40) மற்றும் அவரது கணவர் சந்துரு என்ற சந் திரசேகர் (42) ஆகியோர் ஹேமாவதியிடம், உனது கணவர் கோபிநாத்துக்கு தமிழக மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கி தருகிறோம்; அதற்கு ரூ.18 லட்சம் செலவாகும் எனவும் தெரிவித்தனர்.
இதை நம்பிய ஹேமாவதி தந்தை மூலம் சுபத்ரா மற்றும் அவரது கணவர் கேட்ட பணத்தை 4 தவணைகளாக கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட தம்பதி உறுதியளித்தபடி வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. மேலும், அதற்காக பெற்ற முன்பணம் ரூ.18 லட்சத்தையும் திரும்ப கொடுக்காமல் மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் ஐயங்கார் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் பண மோசடி நடந்தது உறுதியானது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சந்துருவை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய சுபத்ராவை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT