Published : 29 Jul 2025 04:42 PM
Last Updated : 29 Jul 2025 04:42 PM
சென்னை: காதலிக்கு பரிசளிப்பதற்காக, மருத்துவ மாணவியின் செல்போனை பறித்த கடலூர் இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 18 வயது மாணவி ஒருவர் கடந்த 22-ம் தேதி மாலை, வேப்பேரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, எழும்பூர் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். போனில் பேசிக்கொண்டே நடந்து சென்ற அப்பெண்ணை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்தார். திடீரென மாணவியின் செல்போனை பறித்து தப்பினார். இதை சற்றும் எதிர்பாராத மாணவி ‘திருடன்.. திருடன்..’ என கூச்சலிட்டார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாக சென்றவர்கள் திரண்டனர். அதற்குள் செல்போனை பறித்த இளைஞர் தப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில், மாணவியின் செல்போனை பறித்து தப்பியது கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் பகுதியைச் சேர்ந்த இளையராஜா (24) என்பது தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
முன்னதாக நடைபெற்ற விசாரணையில், கைது செய்யப்பட்ட இளையராஜாவின் காதலி, சென்னை வடக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக மாதத்துக்கு இருமுறை இளையராஜா சென்னைக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், காதலிக்கு செல்போன் பரிசளிக்க வேண்டும் என இளையராஜா நினைத்துள்ளார். ஆனால், அவரிடம் புது செல்போன் வாங்க தேவையான பணம் இல்லை. இதையடுத்து, வழிப்பறி செய்து அதன் மூலம் புதியபோன் வாங்கி காதலிக்கு கொடுத்து விடலாம் என நினைத்து சம்பவத்தன்று மருத்துவ மாணவியின் செல்போனை பறித்ததாக கைது செய்யப்பட்ட இளையராஜா வாக்குமூலமாக தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT