Published : 27 Jul 2025 08:51 AM
Last Updated : 27 Jul 2025 08:51 AM
கோவை: கோவையில் 4 வயது சிறுமி கொலை வழக்கில் சிறுமியின் தாய், அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டனர்.
கோவை இருகூர் மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர் ரகுபதி (35). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தமிழரசி (25), மகள் அபர்ணாஸ்ரீ(4). கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரகுபதியும், மனைவி தமிழரசியும் தனித்தனியே வசித்து வருகின்றனர். குழந்தை அபர்ணாஸ்ரீ தமிழரசியின் பராமரிப்பில் இருந்தார். தமிழரசி கட்டிட வேலைக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் மயங்கிக் கிடந்த குழந்தை அபர்ணாஸ்ரீயை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் போலீஸார், குழந்தை உயிரிழந்து தொடர்பாக தாய் தமிழரசியிடம் விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாகப் பதில் அளித்தார். இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, குழந்தையை தாயே கழுத்தை நெரித்துக் கொன்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “கடந்த 8 மாதங்களாக கணவரைப் பிரிந்து வசித்த தமிழரசிக்கு, கட்டிடத் தொழிலாளி வசந்த்(23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு குழந்தை அபர்ணாஸ்ரீ இடையூறாக இருப்பார் என்று கருதியதால், குழந்தையைக் கொன்றுள்ளனர்” என்றனர். இதையடுத்து, தமிழரசி, வசந்த் ஆகியோரை நேற்று கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT