Last Updated : 26 Jul, 2025 06:17 PM

1  

Published : 26 Jul 2025 06:17 PM
Last Updated : 26 Jul 2025 06:17 PM

கோவையில் 4 வயது சிறுமி கொலை - தாய், ஆண் நண்பர் கைது

கைதான தாய் தமிழரசி; உயிரிழந்த குழந்தை அபர்ணா ஸ்ரீ

கோவை: கோவையில் 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பர் ஆகியோர் இன்று (ஜூலை 26) கைது செய்யப்பட்டனர்.

கோவை சிங்காநல்லூரை அடுத்த இருகூரில் உள்ள, மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர் ரகுபதி (35). இவரது மனைவி தமிழரசி (25). இவர்களுக்கு அபர்ணா ஸ்ரீ (4) என்ற மகள் இருந்தார். ரகுபதி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தம்பதியர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரகுபதியும், மனைவி தமிழரசியும் பிரிந்து வசித்து வருகின்றனர். குழந்தை அபர்ணா ஸ்ரீ, தாய் தமிழரசியின் பராமரிப்பில் இருந்தார். தமிழரசி கட்டிடத் கூலித் தொழிலாளி வேலைக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 25) வீட்டில் இருந்த குழந்தை அபர்ணா ஸ்ரீ அசைவற்று இருந்தார். இதைப் பார்த்த தாய் தமிழரசி குழந்தையை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியோடு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிங்காநல்லூர் போலீஸார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை உயிரிழந்து தொடர்பாக தாய் தமிழரசியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின்னர், முரணாகப் பேசினார். இதையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்தனர். போலீஸாரின் தீவிர விசாரணையில், தமிழரசி தனது மகள் அபர்ணா ஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலமாகவும் போலீஸார் இதை உறுதிப்படுத்தினர்.

மேலும், கடந்த 8 மாதங்களாக கணவரைப் பிரிந்து தமிழரசி வசித்து வருகிறார். கட்டிட வேலைக்குச் சென்ற இடத்தில், அங்கு கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்த தருமபுரியைச் சேர்ந்த, ஒண்டிப்புதூரில் தங்கியிருக்கும் வசந்த் (23) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் பழகி வந்துள்ளனர். தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கு முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தை அபர்ணா ஸ்ரீ இடையூறாக இருப்பார் என்பதால் அவரை கொல்ல முடிவெடுத்த தமிழரசி சிறுமியை தனது மகள் என்றும் பார்க்காமல் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிங்காநல்லூர் போலீஸார் கொலை வழக்குப் பதிந்து தமிழரசி மற்றும் அவரது ஆண் நண்பர் வசந்த் ஆகிய இருவரையும் இன்று (ஜூலை 26) கைது செய்தனர். தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x