Published : 24 Jul 2025 06:39 AM
Last Updated : 24 Jul 2025 06:39 AM
திருவாரூர்: கேரளாவில் ரூ.3.24 கோடி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒரு பாஜக நிர்வாகியை கேரள போலீஸார் நேற்று கைது செய்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் என்ற இடத்தில் கடந்த ஜூன் 13-ம் தேதி ரூ.3.24 கோடி ரொக்கத்தை நகைக் கடை அதிபர் ஒருவரிடமிருந்து 12 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்துவிட்டு, ஆரியங்காவு வழியாக தமிழகத்துக்குள் நுழைந்து, திருப்பூர் மாவட்டத்தில் தலைமறைவாகிவிட்டது.
இதுதொடர்பாக, கேரள மாநிலம் கரியகுளக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்(32), திருக்குமார்(37) உட்பட 7 பேரை கைது செய்தனர். மேலும், சிலரை போலீஸார் தேடி வந்தனர்.
காவல் நிலையத்தில் சரண் இந்நிலையில், இந்த வழக்கில் போலீஸார் தன்னை தேடி வருவதையறிந்த திருவாரூரைச் சேர்ந்த பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர்துரை அரசு, ஏற்கெனவே கரிய குளக்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதைத் தொடர்ந்து, திருவாரூருக்கு நேற்று வந்த கேரள போலீஸார், திருவாரூர் அருகே கீழக்காவாதுக்குடியில் வசிக்கும் பாஜக நகர இளைஞரணி தலைவர் ஸ்ரீராம்(30) என்பவரையும் இந்த வழக்கில் கைது செய்தனர். மேலும், இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, ஸ்ரீராமின் காரையும் போலீஸார் பறிமுதல் செய்து, கேரளாவுக்கு எடுத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT