Published : 20 Jul 2025 08:15 AM
Last Updated : 20 Jul 2025 08:15 AM
பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெங்களூரு மண்டல அதிகாரிகள் நேற்று விமான நிலையத்தில் சோதனை நடத்தினர்.
நேற்று அதிகாலையில் தோஹாவில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் 31 வயதான இளைஞரின் உடைமைகளை பரிசோதித்தனர். அவரது பெட்டியில் வழக்கத்துக்கு மாறாக பெரிய அளவில் அதிக கனம் கொண்ட 2 காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தன.
அதன் அட்டையை பிரித்து சோதித்தபோது, அதில் கோகைன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 புத்தகங்களையும் முழுமையாக பிரித்து எடுத்து,
4.06 கிலோ கோகைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.40 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தோஹாவை சேர்ந்த இளைஞர் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், நேற்று பிற்பகல் பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் 3 நாட்கள் காவலில் எடுத்து அந்த இளைஞரிடம்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT