Published : 19 Jul 2025 08:59 PM
Last Updated : 19 Jul 2025 08:59 PM
மதுரை: வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கிய தலைமைக் காவலரை அப்பன் திருப்பதி போலீஸார் இன்று திருப்பூரில் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சிவாவின் மகள் தங்கப்பிரியா (32). பட்டதாரியான இவருக்கும், மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி அருகே காதக்கிணறைச் சேர்ந்த பூபாலனுக்கும் 2018-ல் திருமணம் நடந்தது. இவர் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார். தங்கப்பிரியா தனியார் பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார்.
இவர்களது இரு குழந்தைகளின் காதணி விழாவில் தலா 5 பவுன் தங்க நகைகள் வரதட்சணையாக தர வேண்டும் என பூபாலன் குடும்பத்தினர் கேட்டனர். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், பூபாலன் மனைவியை கொடூரமாகத் தாக்கினார். பலத்த காயமடைந்த தங்கப்பிரியா, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தங்கப்பிரியாவை கொடூரமாகத் தாக்கியது குறித்து பூபாலனும், அவரது தங்கையும் செல்போனில் கிண்டலாக பேசிய உரையாடல் சமூக வலைதளங்களில் பரவியது.
இதற்கிடையே, தங்கப்பிரியாவின் பெற்றோர் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில், மருமகன் பூபாலன் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை செய்ததாக புகார் அளித்தனர். அதன்படி தலைமைக் காவலர் பூபாலன், அவரது தந்தை செந்தில்குமரன் (சாத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர்), தாய் விஜயா, தங்கை அனிதா ஆகிய 4 பேர் மீது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
ஊமச்சிகுளம் டிஎஸ்பி பாலசுந்தரம் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சாந்தி தலைமையிலான தனிப்படையினர், பூபாலன் உள்ளிட்ட 4 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) திருப்பூரில் தலைமறைவாக இருந்த தலைமைக் காவலர் பூபாலனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செந்தில்குமரன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT