Published : 19 Jul 2025 07:42 PM
Last Updated : 19 Jul 2025 07:42 PM
தேவகோட்டை: தேவகோட்டை அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கட்டவெள்ளையன் செட்டியார் வீதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ஹரிஷ்மாதவன் (15). தேவகோட்டை முகமதியர்பட்டணம் பகுதியைச் சேர்ந்த சுபுகான் மகன் முகமது அமீர் (15). இருவரும் காந்தி ரோட்டில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இன்று இருவரும் சிறப்பு வகுப்புக்கு பள்ளிக்குச் சென்றனர். சிறப்பு வகுப்பு முடிந்ததும், பிற்பகல் 3 மணிக்கு சக மாணவர்களுடன் சேர்ந்து இருவரும் சாத்திக்கோட்டை விரிசுழி ஆற்றின் குட்டையில் குளித்தனர்.
அப்போது ஹரிஷ்மாதவன், முகமதுஅமீர் ஆகிய இருவரும் சேற்றில் சிக்கி கொண்டனர். அவர்களை சக மாணவர்கள் காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை. இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி இருவரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தேவகோட்டை பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT