Published : 15 Jul 2025 06:56 AM
Last Updated : 15 Jul 2025 06:56 AM
சென்னை: பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். வியாசர்பாடி, எம்கேபி நகர் அருகே உள்ள புதுநகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சித்ரா. இத் தம்பதிக்கு சங்கர் (19) என்ற மகனும், வனிதா (17) என்ற மகளும் இருந்தனர்.
சங்கர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, பைக் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்நிலையில், சங்கர், நேற்றுமுன்தினம் தனது பிறந்தநாளை எருக்கஞ்சேரி சாலையில் தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், அனைவரும் மது அருந்தினர். அப்போது, அன்று காலை கால்பந்து விளையாடும் போது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை சங்கர் தாக்கியது குறித்து அவரது நண்பர்கள் கேட்டனர். இதில் சங்கருக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே சங்கரை அவரது நண்பர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து கொடுங்கையூர் போலீஸார் நிகழ்விடம் விரைந்து, சங்கர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக, கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சங்கரின் நண்பர்களான அதேப் பகுதியைச் சேர்ந்த லிங்கேஷ், நித்தின், ஸ்டீபன் ராஜ், விஜய் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு கொலை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகரைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (30). குப்பை பொறுக்கும் வேலை செய்து வந்த இவர், நேற்று முன்தினம் அதிகாலை அவரது வீட்டருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே கொலை செய் யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து, கொடுங்கையூர் போலீஸார் விசாரித்து, கொடுங்கையூர் ஆர்.ஆர். நகரைச் சேர்ந்த பிரேம் குமார் என்ற கொக்கு (25) என்பவரை கைது செய்தனர். சில தினங்களுக்கு முன்னர் மது போதையில் கொலை செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணன், பிரேம்குமாரின் செல்போன் மற்றும் ஆதார் கார்டை பெற்றுக் கொண்டு திருப்பி கொடுக்கவில்லை. இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் பிரேம்குமார் கொலை செய்தது தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT