Published : 14 Jul 2025 06:50 PM
Last Updated : 14 Jul 2025 06:50 PM

கரூர் அருகே நில தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை; 4 பேர் காயம் - 6 பேர் கைது

உயிரிழந்த மணிவாசகம்

கரூர்: கரூர் அருகே நிலத் தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக, 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் வாங்கலைச் சேர்ந்தவர் மணிவாசகம் (45). இவர் வாங்கல் காவிரி ஆற்றுப்படுகையில் ராணி என்பவருடைய அனுபவ பாத்தியத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்துக்கு அருகில் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

இந்நிலையில், மணிவாசகம் வாங்கிய இடத்தையொட்டிய பகுதியில் வெங்கடேஷ் நேற்று இரவு மண் அள்ள முற்பட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த ராணி குடும்பத்தினர் மணிவாசகத்துக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், மணிவாசகம், அவரது நண்பர் தம்பு குட்டி என்ற யூகேஸ்வரன், உறவினர் ஆனந்த் ஆகியோர் அங்கு சென்று, மணல் அள்ளுவது குறித்து வெங்கடேஷ் தரப்பினரிடம் கேட்டனர்.

தொடர்ந்து, நில எல்லை தொடர்பாக இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில், மணிவாசகம், யூகேஸ்வரன், ஆனந்த் ஆகியோரை வெங்கடேஷ் தரப்பினர் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்க வந்த ராணி, அவரது தாய் ராசம்மாள் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து, வெங்கடேஷ் தரப்பினர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த வாங்கல் போலீஸார் அங்கு சென்று, காயமடைந்த 5 பேரையும் மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிவாசகம் உயிரிழந்தார்.

தொடர்ந்து யூகேஸ்வரன், ஆனந்த ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வெங்கடேசன் உட்பட 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x