Published : 14 Jul 2025 06:09 AM
Last Updated : 14 Jul 2025 06:09 AM
சென்னை: சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படையினருடன் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் ஒருங்கிணைந்து கண்காணித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு தனிப்படையினர் மற்றும் மதுரவாயல் போலீஸார் நேற்று முன்தினம் மாலை, மதுரவாயல், காமாட்சி நகர் 2-வது மெயின் ரோட்டில் கண்காணித்தனர்.
அப்போது, அங்கு சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் வைத்திருந்த மதுரவாயல் வசந்த் (23), ஆகாஷ் (24), அருண் பரிஷித் (27) பவேஷ் (21), காரனோடை கார்த்திக் (27), முகப்பேர் கிழக்கு கவுதம் (28), சிதம்பரம் அம்மாபேட்டை ராஜ்குமார் (27), செங்குன்றம் தினேஷ்குமார் (24), சூளைமேடு திவாகர் (27), கீழ்ப்பாக்கம் ரூபன் (26) ஆகிய 10 பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தால், அவர்களின் உடைமைகளை சோதித்தபோது அதற்குள் போதை ஸ்டாம்பு, போதை மாத்திரைகள், உயர் ரக கஞ்சா ஆயில் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இவற்றை விற்பனை செய்ய முயன்றபோது அவர்களை அடையாளம் கண்டு, போலீஸார் அவற்றை பறிமுதல் செய்து 10 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT