Published : 14 Jul 2025 06:57 AM
Last Updated : 14 Jul 2025 06:57 AM
ராணிப்பேட்டை: பாணாவரத்தில் வீட்டின் அருகே விளையாடச் சென்ற அண்ணன் - தம்பி உட்பட 3 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் மேட்டுகுன்னத்தூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சரவணன் மகன் புவனேஷ்வரன் (7). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கோபியின் மகன்கள் மோனி பிரசாத் (9), சுஜன் (7). மோனி பிரசாத் 5-வகுப்பும், சுஜன் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று சிறுவர்கள் 3 பேரும் வீட்டின் அருகே விவசாய நிலத்தில் உள்ள குட்டையில் இறங்கி விளையாடிக்கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாகச் சிறுவர்கள் 3 பேரும் அடுத்தது நீரில் மூழ்கித் தத்தளித்தனர். இவர்களது அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று நீரில் மூழ்கிய 3 பேரையும் மீட்டு பாணாவரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவர்கள் 3 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே மூவரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற பாணாவரம் போலீஸார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT