Published : 11 Jul 2025 08:54 AM
Last Updated : 11 Jul 2025 08:54 AM
சென்னை: மேற்கு மாம்பலத்தில் வசிப்பவர் சூரி (70). இவர் அதே பகுதியில் உள்ள சிவன்மலை ஆண்டவர் கடை எதிரில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 1-ம் தேதி மாலை வழக்கம்போல் மூதாட்டி சூரி பூக்கட்டிக் கொண்டிருந்தார். அப்போது டிப்-டாப் உடை அணிந்து வந்த நபர் மூதாட்டியிடம், அரசின் முதியோர் உதவித் தொகை ரூ.1000 பெற்றுத் தருவதாகவும், அதற்கு பூக்கட்டுவதுபோல் வீடியோ எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து வீடியோவுக்கு தயாரான மூதாட்டியிடம், “நீங்கள் நகை அணிந்திருந்தால் உதவித்தொகை கிடைக்காது. அதை கழற்றி கொடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். இதை நம்பிய மூதாட்டி அவர் அணிந்திருந்த 2 தங்கக் கம்மல் மற்றும் ஒரு மூக்குத்தி ஆகியவற்றை கழற்றி அந்த நபரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து வீடியோ எடுப்பதுபோல் பாவனை செய்த அந்த நபர் அங்கிருந்து நைசாக நழுவிச் சென்றார்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மூதாட்டி, இது தொடர்பாக அசோக் நகர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் இவ்வழக்கில் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் அயூப் (37) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், ஷேக் அயூப் மீது ஏற்கெனவே 7 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT