Published : 11 Jul 2025 05:26 AM
Last Updated : 11 Jul 2025 05:26 AM
சென்னை: திருமலா பால் நிறுவனத்தில் ரூ.40 கோடி கையாடல் விவகாரத்தில் சிக்கிய மேலாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி(37). திருமணமாகி குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகர், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அண்மையில் திருமலா பால் நிறுவனம் அவர்களது நிறுவன வரவு-செலவு கணக்குகளை சரிபார்த்து தணிக்கை செய்துள்ளது. அப்போது, ரூ.40 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. நவீன் அந்த பணத்தை கையாடல் செய்ததாகவும், அந்த பணத்தை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பரின் வங்கி கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் சார்பில் கடந்த மாதம் 25-ம் தேதி கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் நவீனை, நேரில் வரும்படி கூறி போனில் அழைத்து விசாரித்ததாகவும், அப்போது, ‘பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்’ என போலீஸாரிடம் நவீன் கெஞ்சி கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவர் வீட்டருகே உள்ள குடிசையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடமாகக் கிடந்தார். தகவல் அறிந்து புழல் போலீஸார் சம்பவ இடம் சென்று, நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீஸாரின் விசாரணைக்கு பயந்து நவீன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நவீனின் குடும்பத்தினர் கூறும்போது, ‘‘நேற்று முன்தினம் நவீனை பார்க்க அவருடன் பணிபுரிந்த ஊழியர்கள் இருவர் வந்தனர். பணத்தை திருப்பி கொடுத்து விட்டால் மட்டும் சும்மா விட்டுவிடு வோம் என நினைக்க வேண்டாம். உன்னை எப்படியும் சிறையில் தள்ளி விடுவோம் என்று மிரட்டினர். அதேபோல், போலீஸாரும் கடும் நெருக்கடி கொடுத்ததால் நவீன் இந்த முடிவை எடுத்திருக்கலாம்’’ என குற்றம்சாட்டினர்.
காவல் ஆணையர் விளக்கம்: இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாதவரம் திருமலா பால் நிறுவனத்தின் சட்ட மேலாளர் முகமது தமிமுல் அன்சாரி, கடந்த ஜூன் 24-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில், தங்கள் நிறுவன நிதிப்பிரிவின் கருவூல மேலாளரான நவீன் பொலினேனி சுமார் ரூ.40 கோடி மோசடி செய்ததாக புகார் அளித்தார். அது தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கு பட்டியலை சமர்ப்பிக்க அறிவுறுத்தினோம். அவற்றை சமர்ப்பிக்காத காரணத்தினால், புகார் மனு விசாரணை நிலையிலேயே உள்ளது.
தற்கொலை செய்து கொண்ட நவீன் பொலினேனியை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கவில்லை. மேலும், முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நவீன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருமலா பால் நிறுவனத்தின் சட்ட மேலாளர், ஜூ்ன் 25-ல் கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் இதேபோன்று அளித்த புகாரானது, விசாரணைக்காக புழல் உதவி ஆணையருக்கு அனுப்பப்பட்டு, அவர் மூலமாக மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால்,காவல் நிலையத்தில் விசாரணை ஏதும் தொடங்கவில்லை. நவீனை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தவில்லை.
மின்னஞ்சலில் தகவல்: இந்நிலையில், நவீன் நேற்று முன்தினம் மாலை அவரது சகோதரி மற்றும் திருமலா பால் நிறுவன மின்னஞ்சல் முகவரிகளுக்கு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தகவல் அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதில் காவல்துறையினரை பற்றி எவ்வித குற்றச்சாட்டையும் அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும் சமூக வலைதளங்களில் சிலர், கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் திஷா மிட்டலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT