Published : 10 Jul 2025 06:58 AM
Last Updated : 10 Jul 2025 06:58 AM
சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் சுகன்யா (35) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில், “2019-ம் ஆண்டு எங்களது வங்கியில் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு, சென்னையிலும் இயங்கிவரும் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் காட்டாங்குளத்தூர் பகுதியில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள 2 வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததை மறைத்து, கதவு எண்களை மாற்றி, போலியான ஆவணங்களை தயார் செய்து சிலருடன் கூட்டு சேர்ந்து, எங்களது வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.60 லட்சம் வீட்டுக் கடன் பெற்றனர்.
அதை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மோசடி செய்யப்பட்ட பணத்தை பெற்றுத் தர வேண்டும்” எனப் புகாரில் தெரிவித்து இருந்தார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான வண்டலூரைச் சேர்ந்த தேர்விஜயன் (63) அவரிடம் வீடு வாங்குபவர்களுக்கு போலியான ஆவணங்களை தயார் செய்து கொடுத்து வங்கியில் சமர்ப்பித்து வீட்டுக் கடன் பெற்று அதை வங்கிக்கு திரும்பச் செலுத்தாமல் சுயலாபம் பெறும் நோக்கத்துடன் வங்கி மற்றும் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்து சட்ட விரோதமாக ரூ.73 லட்சத்து 77,416 கையாடல் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த தேர்விஜயனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT