Published : 09 Jul 2025 05:59 AM
Last Updated : 09 Jul 2025 05:59 AM
சென்னை: 3 மாநிலங்களில் ஏராளமான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த முக்கிய ரவுடியை சென்னை போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி மாடு தினேஷ் (39). இவர் மீது தமிழகத்தில் மட்டும் கொலை, செம்மர கடத்தல், கஞ்சா விற்பனை, வழிப்பறி, திருட்டு உட்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.
2010 முதல் 15 ஆண்டுகளாக இவர் தலைமறைவாக இருந்து வந்தார். தான் இறந்துவிட்டதாக கூட்டாளிகள் மூலம் போலீஸாருக்கு தவறான தகவல்களை கொடுத்து, திரை மறைவிலிருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். சென்னை போலீஸாரின் நெருக்கடியால் இருப்பிடத்தை ஆந்திராவுக்கு மாற்றியுள்ளார். அங்கும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் கர்நாடகா மாநிலத்திலும் இவர் மீது வழக்கு உள்ளது.
இதையடுத்து, இவரை கைது செய்து சிறையில் அடைக்க அதிதீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். இந்நிலையில், வேலூரை அடுத்த காட்பாடியில் தினேஷ் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே சென்னை தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கி முனையில் அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT