Published : 08 Jul 2025 02:55 PM
Last Updated : 08 Jul 2025 02:55 PM
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நுண்ணுயிர் பிரிவு மற்றும் க்யூபிராஞ் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நுண்ணுயிர் பிரிவு காவல் துறையினர் கடந்த சில நாட்களாக தீவிர விசாரணை நடத்தியபோது, ஆம்பூர் ரெட்டித்தோப்பு அடுத்த கம்பிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த முகமது மீரான் மகன் ஆசிப் (28) என்பவர் தனது வீட்டில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து, ஆசிப் வீட்டில் ஆம்பூர் டவுன் காவல் துறையினருடன் இணைந்து க்யூ பிராஞ்ச் பிரிவு மற்றும் நுண்ணுயிர் காவல் துறையினர் சோதனை நடத்தியபோது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, ஆசிப்பிடம் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த தனது சகோதரி ஆஜூரா (28) என்பவர் வீட்டில் 4 கைதுப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
துப்பாக்கிகள் பறிமுதல்: இதையடுத்து, வேலூர் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொணவட்டம் பகுதியில் ஆஜூரா வீட்டுக்கு சென்று அங்கு ஒரு கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 ரிவால்வர், 1 பிஸ்டல், 1 ஏர்கன் என மொத்தம் 4 துப்பாக்கிகள் பறிமுதல் செய்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, நடத்தப்பட்ட பல கட்ட விசாரணையில் இறுதியில் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்ததாக ஆசிப், அவரது சகோதரி ஆஜூரா உட்பட 3 பேர் மீது ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT