Published : 05 Jul 2025 05:58 AM
Last Updated : 05 Jul 2025 05:58 AM
ஊட்டி: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக பல்வேறு அரசுப் பள்ளிகளில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்தார். அங்கு 6 முதல் 9 வகுப்பு வரை அறிவியல் பாடம் எடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் அந்தப் பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக போலீஸார் சென்றனர். பயிற்சி வகுப்பு முடிந்ததும்
6-ம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவி ஒருவர், அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார். தொடர்ந்து பல மாணவிகளும் அவர் மீது புகார் தெரிவித்தனர். பின்னர், ஆசிரியர் செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக 21 மாணவிகள் புகார் அளித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், இதுகுறித்து உயரதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப் பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, ஊட்டி ஊரக காவல் ஆய்வாளர் விஜயா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமரை கைது செய்தனர். இந்நிலையில், ஆசிரியர் செந்தில்குமார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் தெரிவித்தார்.
அவர் கூறும் போது, ‘பாலியல் புகாரில் கைதாகியுள்ள ஆசிரியர்செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT