Published : 05 Jul 2025 05:47 AM
Last Updated : 05 Jul 2025 05:47 AM
திருப்பூர்: அவிநாசி இளம் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில், அவரது மாமியார் நேற்று கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் ஜெயம் கார்டனை சேர்ந்தவர் கவின்குமார் (29). இவரது மனைவி ரிதன்யா (27). கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், கடந்த 28-ம் தேதி மொண்டிபாளையம் அருகே காரில் விஷமருந்தி ரிதன்யா தற்கொலை செய்துகொண்டார்.
இறப்பதற்கு முன்பாக ரிதன்யா, கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டி தனது தந்தை அண்ணாதுரைக்கு அனுப்பிய வாட்ஸ்அப் ஆடியோ பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது துன்புறுத்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சேவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கவின்குமார், ஈஸ்வரமூர்த்தியை கைது செய்தனர். சித்ராதேவியை உடல்நிலையை காரணம் காட்டி கைது செய்யவில்லை.
வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதால் சித்ராதேவியை கைது செய்யவில்லை என்று ரிதன்யாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், மாமியார் சித்ராதேவி நேற்று கைது செய்யப்பட்டார்.
எஸ்.பி.யுடன் தந்தை சந்திப்பு: இந்நிலையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை மற்றும் உறவினர்கள் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவை நேற்று சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். தொடர்ந்து அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். பெண் பாதிப்பு தொடர்பாக, பொதுமக்கள் யாரேனும் அறிந்திருந்தால், அவர்களும் வந்து தகவல் அளிக்கலாம். அதையும் விசாரிக்கத் தயாராக இருப்பதாக எஸ்.பி.தெரிவித்துள்ளார். மகள் தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தர தர வேண்டும்” என்றார்.
இதற்கிடையில், கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமீன் தொடர்பான மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன் விசாரித்தார். அப்போது, கவின்குமார் தரப்பில் காலஅவகாசம் கேட்டதால், விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT