Published : 02 Jul 2025 12:34 AM
Last Updated : 02 Jul 2025 12:34 AM
சென்னை: தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் தொடர்புடைய 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் கடந்த 2013-ம் ஆண்டு சென்னையில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, கூட்டாளிகளான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் இருமாநில காவல்துறையினர் மேற்கொண்ட ஆபரேஷனில் சிக்கினர். இவர்களுடன் தொடர்புடைய அபுபக்கர் சித்திக்கை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், தற்போது அபுபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமது அலி ஆகியோர் காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக காவல்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 1995 முதல் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மதரீதியான கொலைகளுக்குத் திட்டம் தீட்டி தீவிரவாதச் செயல் புரிந்து தலைமறைவாக இருந்த நாகூர் அபுபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமது அலி ஆகியோர், தனிப்படையினரால் ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 1995-ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டுவெடிப்பு வழக்கு, நாகூர் தங்கம் முத்துக்கிருஷ்ணன் வீட்டில் பார்சல் குண்டுவெடிப்பு வழக்கு, 1999-ல் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் உட்பட 7 இடங்களில் (சென்னை, திருச்சி, கோவை, கேரளா) குண்டுகள் வைத்த வழக்கு, 2011-ல் மதுரை திருமங்கலம் அத்வானி ரதயாத்திரையின்போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2012-ல் வேலூர் மருத்துவர் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு மற்றும் 2013-ல் பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த வழக்குகளில் முக்கியப் பங்காற்றிய அபுபக்கர் சித்திக் கடந்த 30 ஆண்டு களாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவரை தமிழக காவல்துறையின் தனிப்படை போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர்.
அதேபோல், 1999-ல் தமிழகம் மற்றும் கேரளாவில் 7 இடங்களில் வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியான திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி (எ) யூனுஸ் (எ) மன்சூரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, சென்னை நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை அடிப்படையில், இருவரும் தீவிரவாத தடுப்புப் படையினரால் நீதிமன்ற காவலுக்கு இன்று (நேற்று) உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT