Last Updated : 29 Jun, 2025 11:05 PM

 

Published : 29 Jun 2025 11:05 PM
Last Updated : 29 Jun 2025 11:05 PM

போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம் - பின்னணி என்ன?

திருப்புவனம்: போலீஸார் விசாரணையில் மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவனம் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த பாலகுரு மகன் அஜித்குமார் (27) காவலாளியாக பணிபுரிந்தார்.

ஜூன் 27-ம் தேதி மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (75) என்பவர் தனது மகள் நிகிதாவுடன் சாமி கும்பிட காரில் வந்தார். காரை நிகிதா ஓட்டி வந்தார். சிவகாமி நடக்க முடியாததால், காவலாளி அஜித்குமார் (27) சக்கர நாற்காலி எடுத்து வந்து கொடுத்தார். அப்போது காரை ‘பார்க்கிங்’ செய்யுமாறு நிகிதா தெரிவித்தார்.

அஜித்குமாருக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால், மற்றொருவர் உதவியுடன் காரை ‘பார்க்கிங்’ செய்துவிட்டு, சாவியை நிகிதாவிடம் கொடுத்தார். வழிபாடு முடிந்து சிவகாமி, நிகிதா ஆகியோர் காரில் ஏறியபோது, பையில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 10 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து திருப்புவனம் போலீஸாரிடம் நிகிதா புகார் தெரிவித்தார்.

தொடர்ந்து அஜித்குமார் உள்ளிட்ட சிலரை அழைத்து சென்ற போலீஸார், காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அஜித்குமாரை தவிர்த்து மற்றவர்களை உடனே விடுத்தனர். நேற்று அஜித்குமாரை காவல் நிலையத்தில் இருந்து விடுவித்தனர். வெளியே வந்த அவரை மீண்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அன்று இரவு அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக பிஎன்எஸ் 196 பிரிவின் கீழ் திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து மானாமதுரை உட்கோட்ட தனிப்படையைச் சேர்ந்த காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார். இன்று இச்சம்பவம் குறித்து திருப்புவனம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வெங்கடேஷ்பிரசாத் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்வதற்கு அஜித்குமார் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து மடப்புரத்திலேயே இருந்தனர். அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், சிவகங்கை கோட்டாசியர் விஜயகுமார், வட்டாட்சியர் விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அஜித்குமாரை கடுமையாக தாக்கி கொலை செய்த காவலர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

காவலர்களை ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். குடும்பத்தில் ஒருவருக்கு கோயிலில் வேலை தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தரப்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் தருவதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சமரசமடைந்த அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமார் இருவரையும் திமுக பிரமுகர் ஒருவரது காரில் ஏற்றி, உடலை வாங்க மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல முற்பட்டனர். திமுக பிரமுகர் காரில் ஏற்றிச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் தலைமையிலான அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களை சமரசப்படுத்திய போலீஸார், அஜித்குமாரின் தாயார், சகோதரரை காவல்துறை காரில் ஏற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x