Last Updated : 28 Jun, 2025 09:24 PM

 

Published : 28 Jun 2025 09:24 PM
Last Updated : 28 Jun 2025 09:24 PM

பிரபல கட்டுமான நிறுவனங்களின் பெயரில் பல கோடி மோசடி - 5 பேர் கைது

புதுச்சேரி: பிரபல கட்டுமான நிறுவனங்களின் பெயரில் ஃபேஸ்புக் வழியாக பல கோடி மோசடி செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த சேதுராமன் முகநூலில் ‘வைசாக் ஸ்டீல்’ என்ற நிறுவனத்தின் பெயரில், சந்தை விலையை விடக் குறைவாக கட்டுமானப் பொருட்களை தருகிறோம் என்ற விளம்பரத்தைப் பார்த்து, ரூ.31 லட்சத்துக்கு பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், பொருட்கள் வராததால் ஏமாற்றப்பட்டதை அறிந்து, புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்தார்.

விசாரணையில், பிஹார் மாநில தலைநகர் பாட்னாவில் குடியிருந்த, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராகுல்குமார் சிங் (30), பிஹாரைச் சேர்ந்த உத்தம் விஷால் குமார் (24), ராயுஷன் குமார் (24), அபிஷேக் குமார் (27), பெங்களூரு தயாந்த் (30) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.34 லட்சம் ரொக்கம், 40 செல்போன்கள், லேப்டாப், டேப்லெட் சாதனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

தொடர் விசாரணையில், 2019 முதல் நாடு முழுவதும் உள்ள பெரிய கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களில் ஃபேஸ்புக் வழியாக கோடிக் கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர், கைது செய்யப்பட்ட 5 பேரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து டிஐஜி சத்தியசுந்தரம் கூறும்போது, “கைது செய்யப்பட்டவர்கள் மீது நாடு முழுவதும் 52 புகார்கள் பதிவாகியுள்ளன. கடந்த 6 மாதங்களில் ரூ.32 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x