Published : 28 Jun 2025 07:02 AM
Last Updated : 28 Jun 2025 07:02 AM
சென்னை: கொகைன் போதைப் பொருள் வழக்கில் ஏற்கெனவே, 24 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் சூளைமேடு போலீஸார் கடந்த ஜனவரி 25-ம் தேதி மாலை, சூளைமேடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில், கொகைன் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து கொகைன் பதுக்கி வைத்திருந்ததாக ராயப்பேட்டையைச் சேர்ந்த பயாஸ் அகமது (31), அவரது கூட்டாளி கோயம்பேட்டைச் சேர்ந்த சந்திரசேகர் (35) ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அவர்களோடு சேர்த்து அடுத்தடுத்து 24 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த சாரா குமாமா என்ற பிளெஸ்ஸிங் (41) கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவரிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT