Published : 26 Jun 2025 02:17 PM
Last Updated : 26 Jun 2025 02:17 PM
சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவை நுங்கம்பாக்கம் போலீஸார் இன்று (ஜூன் 26) கைது செய்தனர்.
‘கழுகு’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி நுங்கம்பாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் தலைமறைவானார். செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. இதையடுத்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 25) மாலை நடிகர் கிருஷ்ணா தனது வழக்கறிஞர்களுடன் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தான் எந்த வகையான போதைப் பொருட்களையும் பயன்படுத்தியது இல்லை என உறுதியாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கிருஷ்ணாவின் வீட்டிலும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து, நடிகர் கிருஷ்ணாவுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. நடிகர் கிருஷ்ணாவிடம் 16 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய நுங்கம்பாக்கம் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT