Last Updated : 25 Jun, 2025 08:04 PM

1  

Published : 25 Jun 2025 08:04 PM
Last Updated : 25 Jun 2025 08:04 PM

பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.6.90 லட்சம் மோசடி: கிருஷ்ணகிரியில் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மாட்டுப் பண்ணை உரிமையாளரிடம் ரூ.6.90 லட்சம் மோசடி செய்ய முயற்சித்தவரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த ஆவகானப்பள்ளியை சேர்ந்தவர் யுவராஜ் (38). இவர் பி.இ பட்டதாரி. இவர் திருமணமாகி ஒரு மகளுடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவர், ஆவகானப்பள்ளியில் 40 நாட்டு மாடுகளை வைத்து மாட்டுப் பண்ணையும் நடத்தி வருகிறார். இதனை அவரது சகோதரர் பராமரித்து வருகிறார்.

இந்நிலையில், யுவராஜ் அவ்வப்போது மாட்டுப் பண்ணைக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு யுவராஜை, நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த இதய கணேஷ் (35) என்கிற புரோக்கர் தொடர்பு கொண்டுள்ளார். இதில் ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளார். தொடர்ந்து, யுவராஜை தொடர்பு கொண்ட இதய கணேஷ், மாட்டு வியாபாரம் மட்டும் செய்து லாபம் பார்த்தால் போதாது, பணம் இரட்டிப்பு செய்து லாபம் பார்க்கலாம் என ஆசை காட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த 21-ம் தேதி ஆவகானப்பள்ளியில் உள்ள யுவராஜ் பண்ணை வீட்டிற்கு இதயகணேஷ் வேறு ஒருவருடன் கூட்டி வந்துள்ளார்.

இருவரும், யுவராஜிடம் ரூ.6.90 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக கருப்பு டேப் ஒட்டப்பட்ட வெள்ளை தாள்களை கொடுத்துள்ளனர். அதனை கெமிக்கல்கள் கலந்த மின் இணைப்பு கொடுக்கப்பட்ட பக்கெட்டில் 8 மணி நேரம் ஊறவைத்தால் 500 ரூபாய் நோட்டுகளாக மாறிவிடும் என கூறியுள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் யுவராஜ், ஒரு சில கருப்பு டேப் ஒட்டப்பட்ட வெள்ளை தாள்களை பக்கெட்டில் ஊறவைத்துள்ளார். மேலும், 8 மணி நேர ஆகும் என்பதால், யுவராஜ் இதயகணேஷ் மற்றும் அவருடன் வந்த நபரை அழைத்து கொண்டு வெளியில் சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து பண்ணை வீட்டிற்கு தொடர்பு கொண்ட யுவராஜ், நோட்டுகள், பணமாக மாறிவிட்டதா என கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்தவர்கள், வெள்ளை தாள்கள் கருகிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த யுவராஜ், அவர்களிடம் கேட்டபோது, இதய கணேசுடன் வந்த நபர் தப்பியோடியுள்ளார்.

தொடர்ந்து, இதயகணேசை, பிடித்த யுவராஜ், கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் பிரபுவிடம் ஒப்படைத்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில், இதய கணேஷ் ஒரு 500 ரூபாய் நோட்டில் கருப்பு மை தடவி வைத்து, அதில், வெள்ளை நிற கெமிக்கலை ஊற்றி, கருப்பு பேப்பரை, 500 ரூபாயாக மாற்றியதாக நம்ப வைத்து, யுவராஜிடம் 6.90 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

மேலும் இவர் பல்வேறு பகுதிகளில் பணம் இரட்டிப்பு எனக்கூறி ஏமாற்றும் கும்பலுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது. யுவராஜ் புகாரின் அடிப்படையில், இதய கணேஷை கைது செய்த போலீஸார், தப்பியோடி நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், அவரிடமிருந்து ரூ.6.90 லட்சம் ரொக்கம், வெள்ளை தாள்கள் அடங்கிய கட்டுக்கள், ரசாயனம் பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x