Published : 25 Jun 2025 09:06 AM
Last Updated : 25 Jun 2025 09:06 AM
போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது வாக்குமூலத்தில் அதிமுக தொழிநுட்ப பிரிவில் நிர்வாகியாக இருந்த பிரசாத் குறித்தும் விவரித்துள்ளார்.
“என்னை வைத்து அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் ‘தீங்கிரை’ என்ற படத்தை இயக்கினார். ஒப்பந்தப்படி முழு பணத்தையும் அவர் தரவில்லை. நாங்கள் சந்தித்தபோதெல்லாம் அவர் என்னை மதுபானக் கூடத்துக்கு அழைத்துச் செல்வார். பின்னர் போதைப் பொருள் கொடுத்தார். கடன் உட்பட குடும்ப பிரச்சினையால் போதைப் பொருளை அடிக்கடி பயன்படுத்த தொடங்கினேன்.
அதன் பிறகு ஆப்பிரிக்க போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜான், சேலம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமார் உள்ளிட்ட மேலும் சிலரிடம் அடிக்கடி நானே நேரடியாகவும், பிற நபர்கள் மூலமாகவும் போதை வஸ்துவை வாங்கினேன். நான் மட்டும் அல்லாமல் திரைத்துறையில் 10-க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர், நடிகைகளும் போதைப் பொருளை பயன்படுத்தி வருகின்றனர். நான் தவறு செய்துவிட்டேன்” என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
யார் இந்த பிரசாத்? - போதைப் பொருள் வழக்கில் அதிமுக தொழில்நுட்ப பிரிவில் நிர்வாகியாக இருந்த பிரசாத் (33), கடந்த மாதம் 29-ம் தேதி நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
பிரசாத், தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியிலும், பின்னர் திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியில் நிர்வாகியாகவும் பதவி வகித்துள்ளார். அதன்பிறகே அதிமுகவில் சேர்ந்துள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 200 பேரிடம் ரூ.2 கோடி மோசடி செய்துள்ளார்.
இவருடன் தொடர்பில் இருந்த மதுரை ஆயுதப்படை தலைமைக் காவலர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஜானிடம் போதைப் பொருள் வாங்கி விற்பனை செய்துள்ளார். இது தொடர்புடைய பணப்பரிவர்த்தனை மற்றும் மின்னணு தொழில்நுட்ப ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT