Published : 16 Jun 2025 06:08 AM
Last Updated : 16 Jun 2025 06:08 AM

மதுரை திருமங்கலம் அருகே காவல் நிலையத்தை சூறையாடிய ரவுடிகள் கைது

பிரபாகரன், அய்யனார்

மதுரை: திருமங்கலம் அருகே காவல் நிலையத்தை சூறையாடி, தலைமைக் காவலரை சிறைவைத்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடிகள் 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் வி.சத்திரபட்டியைச் சேர்ந்த பிரபாகரன் சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். அண்மையில் ஜாமீனில் வெளிவந்தார். கடந்த 13-ம் தேதி பிரபாகரன் மீதான வேறொரு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்றனர். அங்கு பிரபாகரன் இல்லாததால், அவரது தந்தை முத்துவேலுவிடம் விசாரித்துவிட்டுச் சென்றனர்.

வீட்டில் தான் இல்லாதபோது, தந்தையிடம் போலீஸார் விசாரணை நடத்தியதை அறிந்த பிரபாகரன் ஆத்திரமடைந்து, தனது நண்பருடன் வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்துக்கு நள்ளிரவில் சென்றார். அங்கு இரவுப் பணியிலிருந்த தலைமைக் காவலர் பால்பாண்டியிடம் வாக்குவாதம் செய்து, காவல் நிலையத்திலிருந்த கணினி உள்ளிட்ட பொருட்களை இருவரும் சூறையாடினர். பின்னர், பால்பாண்டியை காவல் நிலையத்தில் வைத்துப் பூட்டிவிட்டு தப்பினர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரபாகரன், அவரது நண்பர் அய்யனாரை பிடிக்க டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், இருவரும் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி காவல் சோதனைச் சாவடி அருகே நேற்று சென்றபோது போலீஸார் அவர்களைக் கைது செய்து, மதுரை மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

தப்பியோட முயன்றபோது... மதுரை போலீஸார் இருவரையும் விசாரணைக்காக அழைத்து வந்தபோது, கண்மாய் பகுதியில் பிரபாகரன் தப்பியோட முயன்றார். அப்போது அவரது வலது கை, இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், பிரபாகரன், அய்யனார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x