Published : 15 Jun 2025 12:49 AM
Last Updated : 15 Jun 2025 12:49 AM
சோளிங்கர் பாமக வழக்கறிஞர் சக்கரவர்த்தியின் சந்தேக மரணம் வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் முன்விரோதம் காரணமாக அவரை, மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக இருவரை பிடித்தனர். இதில், ஒருவர் காவல் துறையினரிடமிருந்து தப்ப முயன்றதால் அவரை சுட்டுப்பிடித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சக்கரவர்த்தி (48). இவர், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாமக இளைஞர் அணி செயலாளராக இருந்தார். சக்கரவர்த்தி கடந்த 11-ம் தேதி இரவு வீட்டின் அருகே உள்ள சாலையோரம் உயிரிழந்து கிடந்தார். காவல்துறையினர் சந்தேகம் மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின்படி அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையிலான 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சோளிங்கர் அடுத்த ரெண்டாடி பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சீனிவாசனை (51) என்பவரை கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி மர்ம கும்பல் கொலை செய்தது. இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி பிரகாஷ் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த குற்றவாளிகளை ஜாமீனில் எடுக்கக்கூடாது என வழக்கறிஞர் சக்கரவர்த்திக்கு, கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரெண்டாடி பகுதியைச் சேர்ந்த பிரபு (28) மற்றும் அவரது நண்பர் குப்புக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த மாதவன் (25) ஆகியோர் நாட்டு துப்பாக்கியால் சக்கரவர்த்தியை சுட்டுக்கொலை செய்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
இதனால், அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில் சிப்காட் பெல் சாலையோரம் நின்றிருந்த பிரபு மற்றும் மாதவனை காவல்துறையினர் நேற்று மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். இதில், மாதவன் காவல் துறையினரிடம் சிக்கினார். காவல் துறையினரை நோக்கி நாட்டு துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோட முயன்ற பிரபுவை காவல்துறையினர் அவரது இடது காலில் சுட்டுப்பிடித்தனர். பின்னர், வாலாஜா அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கில் வேறுயாருக்காவது தொடர்பு உள்ளதா? என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT