Published : 05 Jun 2025 08:04 AM
Last Updated : 05 Jun 2025 08:04 AM
சென்னை: ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10.55 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அரும்பாக்கம் பாலவிநாயகர் நகரை சேர்ந்தவர் சரவணன் (43). தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர் கடந்த ஜனவரி மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
முகநூலில் ஸ்மிரிதி ஷர்மா என்ற பெயரில் ஒருவர் அறிமுகமானார். அவர் செல்போனில் என்னை தொடர்பு கொண்டு, ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றார். இதை நம்பி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 14 தவணைகளாக மொத்தம் ரூ.10.55 லட்சம் கொடுத்தேன். ஆனால், அவர் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, என் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதுகுறித்து மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோசடியில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ரெங்கநாதன் (26) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT