Published : 04 Jun 2025 07:31 PM
Last Updated : 04 Jun 2025 07:31 PM
ஊட்டி: பழங்குடியின மக்களை மூளைச் சலவை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூர் சிறையிலிருந்த மாவோயிஸ்ட் சுந்தரி ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் கொலகொம்பை அருகே நெடுகல்கொம்பை பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு சில மாவோஸ்டுகள் வந்தனர். அங்கு வாழும் பழங்குடியின மக்களிடையே அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். மேலும், அரசுக்கு எதிராக பழங்குடியினரை மூளைச் சலவை செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக சுந்தரி, டேனிஷ், ஸ்டாலின், ஷோபா மற்றும் சாவித்திரி ஆகிய ஐந்து பேர் மீது அப்போது கொலக்கம்பை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரும் கர்நாடகா, தமிழகம், கேரளா உட்பட்ட காவல் நிலையங்களில் சரண் அடைந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு ஊட்டியில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 4) விசாரணைக்கு வந்தது.இதனை தொடர்ந்து, கர்நாடக மாநில சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவோயிஸ்ட் சுந்தரி ஊட்டியில் உள்ள நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குடும்ப நல நீதிபதி லிங்கம் வழக்கை விசாரித்தார். தொடர்ந்து, மாவோயிஸ்ட் சுந்தரியை வரும் 6-ம் தேதி வரை காவல் துறையினர் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, அவரை போலீஸார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT