Published : 03 Jun 2025 07:38 PM
Last Updated : 03 Jun 2025 07:38 PM
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த 2020-ல் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு நேரம் தாண்டி செல்போன் கடையை திறந்து வைத்ததாக கூறி போலீஸாரால் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் போலீஸார் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உட்பட 9 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பி.வடமலை முன்பு இன்று (ஜூன் 3) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மனுதாரர் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணையை முடித்துவிட்டு நீதிமன்றத்தை அணுகலாம் என்றார்.
மனுதாரர் தரப்பில், “சாட்சியங்களை கலைக்க மாட்டேன். விசாரணை நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் மனுதாரரே வாதிட்டு வருகிறார். இதனால் வழக்கு தொடர்பான உத்தரவு நகல்களை சேகரிக்கவும், வாதங்களை தயார் செய்யவும் 3 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். அதற்கு எந்த நிபந்தனை விதித்தாலும் கட்டுப்படுவதாக” தெரிவிக்கப்பட்டது.
சிபிஐ தரப்பில், “வழக்கு விசாரணை முடியும் நிலையில் உள்ளது. மனுதாரர் விசாரணை நீதிமன்றத்தில் அவரே சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து வருகிறார். 51 சாட்சிகளை இதுவரை குறுக்கு விசாரணை செய்துள்ளார். சிபிஐயின் காவல்துறை கண்காணிப்பாளரை விசாரணை நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்ய உள்ளார். எனவே மனுதாரருக்கு ஜாமின் வழங்கக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT