Published : 02 Jun 2025 06:10 AM
Last Updated : 02 Jun 2025 06:10 AM
சென்னை: காதல் விவகாரத்தில் சினிமா உதவி இயக்குநர் கடத்தி தாக்கப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கூலிப்படையை ஏவி தலைமறைவாக இருந்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் சுசீந்திரன். இவரது அலுவலகம் அரும்பாக்கத்தில் உள்ளது. இவரது அலுவலகத்தில் மதுரையைச் சேர்ந்த ராஜகுமரன் என்பவர் பணியாற்றியதோடு, சினிமா உதவி இயக்குநராகவும் இருந்தார். இந்நிலையில் இவரை காரில் வந்த கும்பல் கடந்த 29-ம் தேதி மதியம் அரும்பாக்கத்தில் வைத்து கடத்தியது. பின்னர் அவரை காதலை கைவிடும்படி கூறி ஓடும் காரிலேயே வைத்து சரமாரியாக தாக்கியது. பின்னர், மறைவான இடத்தில் விட்டுவிட்டு தப்பியது.
இதுகுறித்து அரும்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, ராஜகுமரனை காரில் கடத்தி தாக்கியதாக மேற்கு மாம்பலம் சந்திரசேகர் (33), மேற்கு சைதாப்பேட்டை கார்த்திகேயன் (25), தி.நகர் லலித் ஆதித்யா (21), கே.கே.நகர் திவாகர் (21), சைதாப்பேட்டை அகஸ்டின் (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், ``கடத்தப்பட்ட ராஜகுமரன் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்தபோது, இளம் பெண் ஒருவரை காதலித்துள்ளார். அந்த பெண்ணும் அவரை காதலித்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் படிப்பு முடிந்து பெசன்ட் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.
அப்போது, அந்நிறுவன உரிமையாளரான மயிலாப்பூர் சாந்தோம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த டேனியல் ராஜ் (44) என்பவர் ராஜகுமரன் காதலித்த பெண்ணை ஒருதலையாக காதலித்தாராம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் பணியிலிருந்து நின்றுள்ளார். ராஜகுமரன் விலகிக் கொண்டால், அவரது காதலியை தாம் அடைந்துவிடலாம் என்ற ஆசையில் டேனியல் ராஜ் கூலிப்படையை ஏவி ராஜகுமரனை காரில் கடத்தி தாக்கியுள்ளார்'' எனத் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கூலிப்படையை ஏவி தலைமறைவாக இருந்த டேனியல் ராஜ் மற்றும் அவரது மற்றொரு கூட்டாளி பெசன்ட் நகரைச் சேர்ந்த அந்தோணி (39) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT