Published : 02 Jun 2025 06:59 AM
Last Updated : 02 Jun 2025 06:59 AM
அரியலூர்: தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதால் டிராவல்ஸ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் நடுவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் ந.மணிகண்டன்(33). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு அரியலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மணிகண்டன் ரூ.12 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
மாதந்தோறும் தவணைத் தொகை கட்டி வந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக தவணைத் தொகையை கட்டவில்லை என்று தெரிகிறது. இதனால், மணிகண்டன் வீட்டுக்கு வந்த நிதி நிறுவன ஊழியர்கள் இருவர், பணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டினார்களாம். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த மணிகண்டன் கடந்த 25-ம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்ட குடும்பத்தார், ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தனிநபர், சுயஉதவிக் குழுக்கள் பெற்ற கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகால சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்.29-ம் தேதி நிறைவேற்றப்பட்ட நிலையில், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் திட்டியதால் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டது அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT