Published : 30 May 2025 06:30 AM
Last Updated : 30 May 2025 06:30 AM
சென்னை: மெத்தக்குலோன் என்ற புதிய வகை போதைப் பொருளை கடத்தி வந்ததாக சென்னையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, பெரியமேடு போலீஸார் நேற்று காலை, பெரியமேடு, மை லேடி பூங்கா அருகில் நின்றிருந்த 5 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவர்களின் உடமைகளை சோதித்தபோது அதில் மெத்தக்குலோன் என்ற புதிய வகை போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
அதை பறிமுதல் செய்த போலீஸார் போதைப் பொருள் வைத்திருந்ததாக சென்னை அத்திப்பட்டு விஜய்குமார் என்ற மணிகண்டன் (44), மீஞ்சூர் குமார் (36), திரிசூலம் பெரியதுரை (28), மறைமலைநகர் ராஜேஷ் (32), திருவொற்றியூர் நரேஷ் (41) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் வெளி மாநிலங்களிலிருந்து மெத்தக்குலோன் போதைப் பொருளை சென்னைக்கு கடத்திவந்து இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT