Last Updated : 29 May, 2025 09:41 PM

 

Published : 29 May 2025 09:41 PM
Last Updated : 29 May 2025 09:41 PM

சூளகிரி அருகே லாரி கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு; 12 பேர் படுகாயம்

ஓசூர்: சூளகிரி அருகே மாங்காய் பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்ததில், பெண் உயிரிழந்தார். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சப்படி கிராமத்திலிருந்து இன்று மாலை மாங்காய் பாரம் ஏற்றிய சரக்கு வாகனம் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தது. வாகனத்தை ஓட்டுநர் ஸ்ரீநாத் (23) ஓட்டினார். வாகனத்தில் மாங்காய் மீது தொழிலாளர்கள் அமர்ந்து பயணம் செய்தனர். சூளகிரி அருகே கொல்லப்பள்ளி பகுதியில் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்தது.

இதில், குருபரப்பள்ளி அருகே சென்னசந்திரம் சங்கர் என்பவரின் மனைவி பத்மா (45) உயிரிழந்தார். மேலும், சென்னசந்திரம் சின்னதம்பி (60), சென்னகிருஷ்ணன் (58), முருகன் (41), கன்னியம்மாள் (35), ஷாலி (60), ஈஸ்வரி (40), விஜயா (47), மோரமடுகு தேவராஜ் (50), சீனிவாசன் (40), நாராயணன் (65), மாதேஷ் (45), சாஸ்திரி (60) ஆகிய 12 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், சரக்கு வாகனத்திலிருந்த மாங்காய்கள் அனைத்தும் சாலையில் சிதறின.

காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த சூளகிரி போலீஸார், உயிரிழந்த பத்மாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x