Published : 29 May 2025 06:32 PM
Last Updated : 29 May 2025 06:32 PM
ராமேசுவரம்: இலங்கையில் மன்னார் மற்றும் தலைமன்னார் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய பீடி இலை பண்டல்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து மன்னார் வரையிலுமான கடற்கரை பகுதியில் சந்தேகப்படும் நிலையில் சில பண்டல்கள் கரை ஒதுங்கி இருப்பதாக அந்நாட்டு கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்படையினர் கரை ஒதுங்கியிருந்த 25 பண்டல்களை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அந்த பண்டல்களுக்குள் சுமார் 1,000 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் இருந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் இந்த பீடி இலை பண்டல்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு படகில் கடத்திச் செல்லப்பட்டபோது கடல் சீற்றம் காரணமாக கடத்தல்காரர்கள் கடலிலேயே விட்டு விட்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், பண்டல்களை கடத்தியவர்கள் யார் என்பது குறித்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT