Published : 26 May 2025 05:58 PM
Last Updated : 26 May 2025 05:58 PM
மதுரை: மதுரை அருகே அரசு பேருந்தை ஓட்டிச் சென்றபோது, ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால் தவறி விழுந்த நடத்துநர் பரிதாபமாக உயிரிழந்தார். படிக்கட்டு கதவு மூடாமல் இருந்ததால் இச்சம்பவம் நடந்தது.
மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு தஞ்சாவூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. ராஜா என்பவர் பேருந்தை ஓட்டினார். நடத்துநராக புதுக்கோட்டை விசலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா பணியில் இருந்தார். பேருந்து நிலையத்தை கடந்ததால் அவர் பயணிகளிடம் டிக்கெட் வாங்கும் பணியை தொடங்கினார்.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் மதுரை-திருச்சி சாலையில் பேருந்து சென்றபோது, சாலையின் நடுவே வைத்திருந்த இரும்பு தடுப்பில் மோதாமல் இருக்க, ஓட்டுநர் திடீர் பிரேக் பிடித்தார். படிக்கட்டு அருகில் நின்ற கருப்பையா தவறி விழுந்துள்ளார். படிக்கட்டு கதவு மூடாமல் இருந்ததால் இச்சம்பவம் நடந்தது. உடனே பேருந்து நிறுத்தப்பட்டது. தலையில் பலத்த காயம் அடைந்த கருப்பையாவை ஆட்டோ ஒன்றின் மூலம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஏற்கெனவே அவர் உயிரிழந்ததாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பேருந்து கதவுகள் முறையாக மூடாததாலே ஓட்டுநர் பிரேக் அடித்த நேரத்தில் நடத்துநர் தவறி விழுந்து உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒத்தக்கடை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT