Published : 25 May 2025 11:15 AM
Last Updated : 25 May 2025 11:15 AM
வாலாஜா சுங்கச்சாவடி அருகே காணாமல் போன பொறியாளர் மயங்கிய நிலையில் ஓடையில் சுமார் 36 மணி நேரத்துக்கு பிறகு நேற்று உயிருடன் மீட்கப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன் (44). இவர், தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை நரசிம்மன் மேற்பார்வை செய்து வருகிறார். இந்நிலையில், நரசிம்மன் கடந்த 22ம் தேதி வாலாஜா சுங்கச்சாவடி அருகே சாலை அமைக்கும் பணிகளை மேற்பார்வையிட வந்தார். அன்றைய தினம் மாலை முதல் அவர் காணவில்லை. அவரது கைபேசி எண்ணுக்கு அழைத்து போது, அணைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனால், சக பணியாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வாலாஜா காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்தார். இதற்கிடையே, வாலாஜா அடுத்த பாகவெளி கூட்டுச்சாலை அருகே ஓடையில் சுயநினைவின்றி ஒருவர் உடலில் லேசான காயங்களுடன் கிடப்பதாக வாலாஜா காவல் துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடனடியாக காவல்துறையினர் அங்கு சென்று அந்த நபரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில், அவர் காணாமல் போன நரசிம்மன் என்பதும், மே 22ம் தேதி மாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற போது கால் தவறி கீழே விழுந்து மயங்கியதும், சுமார் 36 மணி நேரம் அவர் மயக்கத்துடன் இருப்பது தெரியவந்தது. இது குறித்து வாலாஜா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT