Published : 25 May 2025 12:54 AM
Last Updated : 25 May 2025 12:54 AM

சேலத்தில் மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்​த நபரை சுட்டுப் பிடித்த போலீஸார்: நடந்தது என்ன?

சேலம்: சேலம் அருகே காடையாம்பட்டியில் மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து தப்பியவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். கொலையாளி தாக்கியதில் எஸ்ஐ, காவலர் ஆகியோர் காயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டிக்கு உட்பட்ட குட்டப்பட்டி உப்பள்ளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜனகராஜ். இவரது மனைவி சரஸ்வதி (60). இவர்களது மகன்கள் ராஜா, முருகன். திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். தோட்ட வீட்டில் வசித்து வந்த சரஸ்வதி கடந்த 20-ம் தேதி மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அருகில் இருந்தவர்கள் சரஸ்வதியை தேடியபோது, வனத்தையொட்டிய பகுதியில் காது, மூக்கு அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். விசாரணையில் ஓமலூர் பொட்டியபுரம் கட்டிக்காரனூரைச் சேர்ந்த நரேஷ்குமார் (26) என்பவர் சரஸ்வதியை கொன்று நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து நரேஷ்குமாரை போலீஸார் தேடி வந்த நிலையில் சங்ககிரி மலை அடிவாரத்தில் அவர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், எஸ்.ஐ.விஜயராகவன் தலைமையிலான போலீஸார் நேற்று காலை அப்பகுதிக்குச் சென்று நரேஷ்குமாரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, எஸ்ஐ விஜயராகவன், காவலர் செல்வகுமாரை கத்தியால் தாக்கி வெட்டி விட்டு நரேஷ்குமார் தப்பி ஓட முயன்றார். அப்போது, அவரை சரணடையும்படி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் எச்சரித்தார். ஆனால், அதனையும் மீறி தப்பி ஓட முயன்ற நரேஷ்குமாரை, காவல் ஆய்வாளர் செந்தில்குமார் துப்பாக்கியால் காலில் சுட்டார். இதில் நிலை தடுமாறிய நரேஷ்குமாரை போலீஸார் பிடித்து கைது செய்தார்.

நரேஷ்குமார் வெட்டியதில் காயமடைந்த எஸ்ஐ விஜயராகவன், காவலர் செல்வகுமார் ஆகியோர் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சரக டிஐஜி உமா, சேலம் எஸ்பி (பொ) ராஜேஸ்கண்ணன் ஆகியோர் காயமடைந்த போலீஸாரை சந்தித்து ஆறுதல் கூறினர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நரேஷ்குமாருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

20 நாட்களில் 5 மூதாட்டிகளிடம் கொள்ளை: நரேஷ்குமாரிடம் விசாரணை நடத்தியது குறித்து போலீஸார் கூறியதாவது: கடந்த 2020-ம் ஆண்டு மல்லூர் பகுதியில் வயதான பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கு நரேஷ்குமார் மீது நிலுவையில் உள்ளது. வயதான பெண்களை குறிவைத்து கொடூரமாக தாக்கி கொள்ளையடிக்கும் வழக்கம் கொண்டவர். கரோனா பரவல் காலத்தில் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதியாகியிருந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடிய வழக்கு, போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன.

கடந்த 20 நாட்களில் 5 மூதாட்டிகளை தாக்கி, நகை, பணத்தை நரேஷ்குமார் கொள்ளையடித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. கடந்த 3-ம் தேதி சங்ககிரி வாழக்குட்டையைச் சேர்ந்த பெருமாயி (60), மகுடஞ்சாவடி மொட்டாண்டிபாளையத்தைச் சேர்ந்த ராசம்மாள் (75), கடந்த 19-ம் தேதி திருப்பூர் உடுமலைப்பேட்டை பாப்பம்பட்டியில் தனியாக இருந்த பாக்கியம் (90) உள்ளிட்ட வயதான பெண்களிடம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x