Published : 24 May 2025 01:23 PM
Last Updated : 24 May 2025 01:23 PM
சேலம்: ஓமலூர் அருகே நடந்த மூதாட்டி கொலை வழக்கு குற்றவாளியை சங்ககிரி அருகே போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
கடந்த 20-ம் தேதி அன்று தீவட்டிப்பட்டி அருகே சரஸ்வதி என்ற வயதான மூதாட்டியை மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது கொடூரமாக கொலை செய்து, அவரின் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்த நரேஷ் குமார் (26), இன்று காலை சங்ககிரி அருகே மலை அடிவாரத்தில் பதுங்கி இருந்திருக்கிறார். இவரை பிடிக்கச் சென்ற போலீஸாரை கத்தியால் வெட்டியதில் உதவி ஆய்வாளர் விஜயராகவன் மற்றும் காவலர் செல்வகுமார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
எனவே மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் அவரை கத்தியை போட்டு விட்டு சரணடைமாறு கூறியும் கேட்காததால் அவரது வலது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளார். இவர் மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மல்லூர் பகுதியில் வயதான பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த குற்றவாளி வயதான ஆடு மாடு மேய்க்கும் பெண்களையும் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளையும் குறிவைத்து கொடூரமாக தாக்கி கொள்ளையடிக்கும் வழக்கம் கொண்டவர். கரோனா சமயத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இவர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் இருந்துபோது, அங்கிருந்து தப்பி ஓடிய வழக்கும், போலீஸாரை கொலை மிரட்டல் விடுத்த வழக்கும், நீதிமன்றத்திற்கு வழிகாவல் செய்த போலீஸாரை மிரட்டிய வழக்கம் இவர் மீது உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT