Published : 23 May 2025 07:38 AM
Last Updated : 23 May 2025 07:38 AM
காஞ்சிபுரம்: ரூ.15 ஆயிரத்துக்கு அடமானம் வைக்கப்பட்ட சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்தான். சிறுவனின் சடலம் பெற்றோருக்குத் தெரியாமல் புதைக்கப்பட்டதால், சடலத்தை தோண்டியெடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் ஏனாதி-அங்கம்மாள் தம்பதி, சத்தியவேடு பகுதியைசேர்ந்த முத்து-தனபாக்கியம் தம்பதியிடம் ரூ.15 ஆயிரம் கடன் பெற்றனர். கடனுக்கு அடமானமாக தங்களது 9 வயது மகன் வெங்கடேஷை, 10 மாதத்துக்கு வாத்து மேய்க்கும் பணிக்காக அவர்களுடன் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், முத்து-தனபாக்கியம் தம்பதி, காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கம் பகுதியில் தங்கி, வாத்து மேய்த்து வந்தனர். கடந்த 30 நாட்களுக்கு முன்னர் வெங்கடேஷுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது.தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வெங்கடேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனால் ஏதேனும் பிரச்சினை ஏற்படக் கூடும்என்று கருதி முத்து-தனபாக்கியம்தம்பதி, தங்கள் மகன் ராஜசேகருடன் சேர்ந்து, காஞ்சிபுரம் பாலாற்றில் குழி தோண்டி, வெங்கடேஷ் சடலத்தைப் புதைத்துள்ளனர்.
இந்நிலையில், 10 மாதங்கள் முடிந்ததைத் தொடர்ந்து, சிறுவனைத் தேடி அவனது பெற்றோர் வந்துள்ளனர். ஆனால், தங்களுக்கு சேர வேண்டிய பணத்தைக் கொடுக்கும்படி முத்து-தனபாக்கியம் தம்பதி கூறியுள்ளனர். மேலும், சிறுவன் எங்கிருக்கிறான் என்றும் கூறவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் பெற்றோர், ஆந்திர மாநிலம் சத்தியவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் முத்து, தனபாக்கியம் மற்றும் ராஜசேகரிடம் ஆந்திர மாநில போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சிறுவன் உடல்நிலை சரியில்லாமல் இறந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, புத்தூர் டிஎஸ்பி ரவிக்குமார் தலைமையிலான போலீஸார், காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் உதவியுடன், பாலாற்றில் புதைக்கப்பட்ட சிறுவனின் சடலத்தை தோண்டியெடுத்தனர். பின்னர் சிறுவன் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT