Published : 22 May 2025 04:40 AM
Last Updated : 22 May 2025 04:40 AM

சென்னையில் மது போதையில் விபத்து: விசாரணைக்கு அஞ்சி தலைமை காவலர் உயிரை மாய்த்துக் கொண்ட பரிதாபம்

செந்தில் குமார்

சென்னை: கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தரமணி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் செந்தில் குமார் (47). பரங்கிமலையில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தார்.

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் சாதாரண உடையில், கிண்டி மடுவாங்கரை மேம்பாலம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது தலைமைக் காவலர் ஓட்டிச் சென்ற கார் மோதியது.

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (55) என்பவர் காயம் அடைந்தார். இது ஒருபுறம் இருக்க விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமைக் காவலர் நிற்காமல் சென்றுள்ளார். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் முந்திச் சென்று காரை தடுத்து நிறுத்தியதோடு, தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்து காயம் அடைந்த முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது, அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்ததோடு, மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் எனக் கூறி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், நேற்று காலை தரமணி ரயில் நிலையம் அருகே உள்ள காலி மைதானத்தில் தலைமைக் காவலர் செந்தில், தயாராக கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தரமணி போலீஸார் செந்திலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் செந்தில் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக செந்தில் விபத்தை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக அவரிடம் அவரது உறவினர்கள், நண்பர்கள் தொடர்ந்து விசாரித்து வந்தனர். மேலும், போலீஸாரும் அவர் மீது வழக்கு பதிவு செய்ததால் மன வேதனையில் இருந்த செந்தில் தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் உதவி எண் - 022-25521111 ஆகிய எண்களுக்குத் தொடர்பு கொள்ளளாம் என மனநல ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x