Published : 21 May 2025 06:11 PM
Last Updated : 21 May 2025 06:11 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசூர் மலட்டாற்றில் சகோதரிகள் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் அரசூர் வழியாக மலட்டாறு பாய்கிறது. கடந்த ஓரிரு நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆற்றில் நீரோட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அரசூர் கிராமத்தில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் இன்று நண்பகலில் மலட்டாற்றில் குளித்துள்ளனர்.
அப்போது, அங்கு குளித்துக் கொண்டிருந்த அரசூர் பழனி என்பவரின் மகள்கள் சிவசங்கரி (20), அபிநயா (15) மற்றும் அவர்களது உறவினரான கடலூர் மாவட்டம் தட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (15) ஆகியோர் நீரில் மூழ்கியுள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷின் சகோதரர் கிரண்குமார், வீட்டுக்குச் சென்று பெரியவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம மக்கள், அபிநயா, ராஜேஷ் ஆகியோரது சடலங்களை மீட்டனர். பின்னர், திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சிவசங்கரியின் உடலை மீட்டனர். மூவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த சிவசங்கரி கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார். அபிநயா, பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்றுள்ளார். கடலூர் மாவட்டம் மேல்குமாரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புக்கு ராஜேஷ் தகுதி பெற்றுள்ளார். இவர், கோடை விடுமுறைக்காக அரசூரில் உள்ள உறவினர் பழனி வீட்டுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT