Published : 18 May 2025 11:57 AM
Last Updated : 18 May 2025 11:57 AM
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப் பிரிவுக்கு எதிராக நடிகர் ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதிக வட்டி தருவதாக கூறி, சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக, ஆருத்ரா நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் உட்பட 21 பேருக்கு எதிராக பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த மோசடியில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, ஆர்.கே.சுரேஷின் 8 வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்து, பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் உத்தரவிட்டனர்.
வங்கிக் கணக்குகள் முடக்கத்தை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், வழக்கு எண்ணின் பெயரில் ரூ.8 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், வங்கிக் கணக்குகள் முடக்கத்தை நீக்கும்படி கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின்படி, ஆர்.கே.சுரேஷ் தரப்பில் ரூ.8 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது. இருப்பினும், வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாருக்கு எதிராக ஆர்.கே.சுரேஷ், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த மனு, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வங்கிக் கணக்குகள் முடக்கம் மார்ச் - ஏப்ரல் மாதத்தில் நீக்கப்பட்டு விட்டதாக பொருளாதார குற்றப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்.கே.சுரேஷின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT