Published : 16 May 2025 07:56 PM
Last Updated : 16 May 2025 07:56 PM
ராமேசுவரம்: முயல் தீவு அருகே நடுக்கடலில் 600 லிட்டர் பெட்ரோலுடன் நின்று கொண்டிருந்த ஃபைபர் படகை கைப்பற்றிய இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத் துறையினர், படகிலிருந்த மூவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் இருந்து ராமேசுவரம் அருகே மண்டபம் கடலோரப் பகுதிக்கு படகு மூலம் கடத்தல் பொருள் கொண்டுவரப்படுகிறது என சுங்கத் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலை தொடர்ந்து, மண்டபம் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலோர காவல் படையினருடன் இணைந்து சுங்கத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுக்கடலில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த ஃபைபர் படகு ஒன்றை சோதனை செய்தனர். அந்தப் படகில் சுமார் 600 லிட்டர் பெட்ரோல், கேன்களில் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து பெட்ரோல் கேன்களுடன், ஃபைபர் படகை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத் துறையினர் படகில் இருந்த மூவரையும் கரைக்கு கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் ஃபைபர் படகு மற்றும் படகில் இருந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மண்டபம் சுங்கத் துறை அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT